Feeds:
Posts
Comments

உன் குறல் கேட்க
இன்று என்னுடன் இன்னொரு
ஜீவனும் துடிக்கிறது !!!

பெண்ணே,

வெட்கப் படாதே

என்னைக் காணும் தருணம்,

மனது பொறுக்காதே

உன் தலைக் குனிவை கண்ட பிறகும்!

பெண்ணே,

கண்ணாடியை பார்க்கும் பொழுதெல்லாம்

உன் பிம்பம் தான் தெரிகிறது,

நான் பார்ப்பதென்ன இதயக் கண்ணாடியோ?

நான் இறந்த பின்

என் கல்லறையில் பூக்கள் வேண்டாம்,

பூக்களாவது இன்னும் சில நாட்கள் வாழட்டும் !!!

பெண்ணே,

காதலைச் சொல்ல

ஒரு நிமிடம் போதும்,

காதல் உணர்ந்த நிலையைச் சொல்ல

ஒரு கடிதம் வேண்டும்.

 

உலகிற்கு விடியல் பகல் என்றால்

எனக்கு விடியல் இரவு,

தினம் கனவில் நீ வருவதால்.

 

உன் வரவை எதிர்பார்த்து

மூட மறுக்கிறது இமை,

கனவில் கூட உன்னிடம்

காதலைச் சொல்லாததே சுமை.

 

மார்போடு தலை சாய்த்து

என்னை மெய் மறக்கச் செய்கிறாய்,

விடிந்த பிறகும் கூட

இரவிற்காக ஏங்க வைக்கிறாய்.

 

கருப்பு நிலா அழகென்று உணரவில்லை

உன் கண்களை காணும் வரை,

உயிருடன் மெய் சேரும் இலக்கணம் புரியவில்லை

உன்னைக் காணும் வரை.

 

சூரியன் மறைய

நிலவும் ஒளிர

தலை சாய்கிறேன்,

கனவு கலைந்து கண் விழிக்கும் பொழுது

என் அருகில் நீ இருப்பாய்

என்று எதிர்பார்க்கிறேன்.

 

உணர்வுகளை ஒன்று சேர்த்து எழுதிய கடிதம்

நீ பிரித்து படிக்கும் தருணம்

காதல் உனக்குப் புரியும்

என் மனதின் பாரம் குறையும் !!!

படித்த பட்டதாரி என்று

மார்தட்டிக்கொள்ளும் பெற்றோர்,

வேலையில்லா ஊதாரி என்று

பட்டம் சூட்டும் சுற்றோர் !

 

அனுபவமற்ற நேர்முகத் தேர்வு,

என்னுள் சிரிக்க வைக்கும் முதல் கேள்வி,

‘எத்தனை வருட அனுபவம்?’

வேலை பார்ப்பதிலா? வேலை தேடுவதிலா?

கேட்க நினைத்தேன்

கேட்கும் இடத்தில் நானில்லை

என்பதை உணர்ந்தேன் !

 

மாதத்தின் முதல் திங்கள்

எதிர்ப்பார்த்து நிற்கிறேன்

சம்பளத்தை அல்ல செய்தித்தாளை,

ராசி பலன் படிக்க

தாய் தந்தையர் பார்த்து முறைக்க

தன்’நம்பிக்கை’  ’பலன்’நம்பிக்கை ஆயிற்று !

 

பசியில் அழும் குழந்தையை போல

நித்தமும் அழுகிறேன் வேலைப்பசியால்

வாழ்க்கையில் நானும் ‘அடிபட்ட’தாரி தான் !

 

‘என்ன வாழ்க்கை இது’ என்று சொல்கிறது உதடு

‘வாழ்ந்து பாரடா’ என்று சொல்கிறது மனது !!!

விபத்து !

ஓட்டுனர் பலி !

நடந்ததறியாமல் தன்

வேலையை செய்துகொண்டிருக்கிறது

ஓட்டுனரின் கை கடிகாரம்

டிக் டிக் டிக் !!!

இருள் சூழ்ந்த இரவுப் பொழுது

சூர்யகாந்தியும் தலை நிமிர்ந்தது

விதவைக்கு வாழ்க்கை கொடுத்தது

தீக்குச்சி !

(அன்று)

உன்னுடன் கைக்கோர்த்து நடந்த நாட்கள்,

என் பின்னால் நீ ஓடித்திரிந்த பொழுதுகள்,

நான் உறங்குவதற்காக நீ விழித்த இரவுகள்,

எனக்கு முன் கண் விழித்த பகல்கள்,

தாயே

நினைத்துப் பார்க்கிறேன்

என்னை அறியாது

கண்கள் வியர்க்கிறேன் !

 

விழுப்புண் வலி நான் அறிவதற்குள்

உனது கைகள் என்னை அணைக்கும்,

உனது முந்தானை என் கண்ணை துடைக்கும்,

தாயே

நினைத்துப் பார்க்கிறேன்

என்னை அறியாது

வியப்பில் மூழ்கிறேன் !

 

(இன்று)

அலுப்பின்றி நீ சமைத்த உணவை

குற்றம் சொல்லி அலுத்தது ஒரு காலம்,

அலுப்போடு நான் சமைக்கும் உணவை

அலுப்பின்றி உண்ண வேண்டிய கட்டாயம்,

தாயே

நினைத்துப் பார்க்கிறேன்

யாரும் பார்த்துவிடாது

எனக்குள் சிரிக்கிறேன் !

 

(என்றும்)

இறந்த பின் மண்ணில்

போவது சுகமில்லை,

இருக்கும் பொழுது

உன் மடியில் கிடப்பதே

பெறும் சுகம்

தாயே

நினைத்துப் பார்க்கிறேன்

இறைவனிடம் வேண்டி நிற்கிறேன் !

நிலாச்சோறு அருந்திவிட்டு

வீடு திரும்பினேன்

மன நிறைவோடு,

வானில் நிலா

மட்டும் தனியே,

ஏக்கத்தோடு !

Older Posts »